நடுரோட்டில் தீக்குளித்த இளம் பெண் : அரங்கேறிய திகில் சம்பவம்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கரியப்பா நகரை சேர்ந்தவர் அசோக் என்கிற தெய்வநாயகம் இவர் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் சாலையோர பூட்டுக்கடை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி கலைச்செல்வி (வயது 34) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இல்லாமல் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கலைச்செல்விக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு அதற்கு பல இடங்களில் சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும் உடல் உபாதை குறையாததால் கலைச்செல்வி பலமுறை தனது குடும்பத்தினரிடம் தனது நிலைமையைச் சொல்லி புலம்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி சங்கராபுரம் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் வாங்கி கொண்டு சாலை மாமாந்தூர் பாலம் அருகே தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு நடு ரோட்டிலேயே தீ வைத்துக் கொண்டார்.

வலியால் அலறி துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் மற்றும் உதவி ஆய்வாளர் சத்தியசீலன் பாரதி ஆகியோர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் கலைச்செல்வியின் தற்கொலைக்கு அவரது உடல்நிலை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.