கொழும்பில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை….!


கொழும்பு நகரில் சந்தேகத்திற்குரிய முறையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் 2746 பேர் உள்ளதாக விசேட சுற்றிவளைப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள், அரசு அல்லது தனியார் வளாகங்கள், கட்டுமானத் தளங்கள் போன்றவற்றில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக மேல் மாகாண சமூகப் பொலிஸ் பிரிவு ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் மூன்று நாள் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கொழும்பில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அங்கு அடையாளத்தை உறுதி செய்ய முடியாத சந்தேகத்திற்குரிய 2746 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்னர். 600 இற்கும் மேற்பட்ட சமூக பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, ​​அப்பகுதியில் தற்காலிகமாக வசிப்பவர்கள் குறித்த சரியான தகவல்களை உள்ளீடு செய்து உரிய பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் அல்லது சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கையின் போது, ​​மேல் மாகாணத்திற்கு வெளியே கொழும்பில் தற்போது வசிக்கும் 106,126 தற்காலிக குடியிருப்பாளர்களின் தகவல்களை அதிகாரிகள் சேகரித்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் தெரிவித்தார். அவர்களுக்குள் 1,852 ஆண்களும், 894 பெண்களும் சரியான தகவல்களை வழங்கத் தவறியுள்ளதாக தெரியவந்துள்ளது.