மாணவிகளின் தலைமுடியை வெட்டும் மர்ம நபரை மடக்கிப்பிடித்த பயணிகள்!

பண்டாரவளையில் பாடசாலை மாணவிகளின் தலைமுடியை வெட்டும் மர்ம நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பண்டாரவளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளதுடன் இதனால் குறித்த பகுதி வாழ் பாடசாலை மாணவிகள் மத்தியில் கடந்த சில காலமாக அச்சம் நிலவி வந்துள்ளது.

மேலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஊவ-பரணகம பகுதியைச் சேர்ந்த 33 வயதான சந்தேகநபரே என தெரியவந்துள்ளது.பண்டாரவளையில் இருந்து ஹீல்ஓய வரை பயணித்த பேருந்து ஒன்றில் இருந்த மாணவி ஒருவரின் தலைமுடியை வெட்ட முயற்சித்துள்ள வேளையில் பேருந்தில் பயணித்த சக பயணிகள் குறித்த சந்தேகநபரை பிடித்து பண்டாரவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர் வசமிருந்த பயணப் பையிலிருந்து, பாடசாலை மாணவிகளுடையது என சந்தேகிக்கப்படும் தலைமுடி, கத்தரிக்கோள் உள்ளிட்ட சில பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.