யாழ்.போதனா வைத்தியசாலையில் அலைக்கழிக்கப்படும் நோயாளர்கள்!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிளினிக் செல்லும் நோயாளர்கள், தாதியர்களால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளினிக் செல்லும் நோயாளர்கள் மருத்துவரிடம் செல்வதற்கு முதல் தமது ரிக்கட் எடுக்க வேண்டும்.

இதற்காக ரிக்கெட் எடுக்கச் சென்றால் ரிக்கட் வழங்கும் அறையில் யாருமற்று, ரிக்கட் வழங்குபவர் வரும்வரை நோயாளர்கள் அங்கு மணி கணக்கில் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்படுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர்களிடம் டிக்கட் மருத்துவரிடம் காட்டி விட்டு மருத்துவர் எழுதும் மருந்து கொப்பியை மருந்து எடுக்கும் இடத்தில் கொண்டு செல்லும் போது அங்கே மருந்து வழங்குநர்கள் மருந்து இல்லை என நோயாளர்களை திருப்பியனுப்புவதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருத்துவச் சான்றிதழ் எடுக்க வருகின்றவர்கள் எங்கே மருத்துவச் சான்றிதழ் எடுப்பது என்று தெரியாமல் வைத்தியசாலையையே சுற்றி வரும் நிலையும் காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

அங்கே உள்ள தாதியரிடம் விபரம் கேட்டால் அவர்கள் பதில் சொல்ல மறுப்பதாகவும் சேவைபெறுநர்கள் விசனம் வெளியிடுகின்றனர் . கடந்த வியாழக்கிழமை (13) யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கண் கிளிக் சென்ற நோயாளர்கள் எதிர்கொண்ட சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு சிரமங்களை எதிர்கொண்டதாக நோயாளர்கள் கூறுகின்றனர்.

எனவே தற்போதைய கொரோனா காலத்தில் இந்த விடயம் குறித்து உரியவர்கள் கவனம் எடுக்கவேண்டுமெனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.