மகனை தேடியலைந்த மற்றுமொரு தாயார் உயிரிழப்பு; தமிழர்கள் மத்தியில் தொடரும் சோகம்…..!

காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த கருப்பையா ராமாய் (வயது 78) சுகவீனமடைந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் வயது 38 கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

காணாமலாக்கப்பட்ட உறவினர்களைத் தேடி வடக்கு, கிழக்கில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் உணவுத்தவிர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் வவுனியாவில் 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் உயிர்ழந்த தாயார் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று (21) மரணமடைந்துள்ளமை தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.