இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் விடுதலை…!


இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான ஆறுமாதகால சாதாரண சிறை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 5 வருட காலத்தில் மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில், இந்திய மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.