படிப்பு குறைவாம்…தமிழர் பகுதியில் தரம் 5 மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி!

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற மாணவி ஒருவருக்கு பாடசாலை நிர்வாகம் அனுமதி மறுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவி பாடங்களில் குறைந்த புள்ளிகளை பெற்றதாக காரணம் கூறி பாடசாலை நிர்வாகம் அவரை பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கவில்லை என கூறப்படுகின்றது.

பாடசாலையில் வகுப்புக்கள் நடைபெற்றபோது, தனியான மேசை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் , இது தொடர்பாக பெற்றோர் வினவியபோது, படிப்பில் குறைவான மார்க் எடுப்பதனால் உங்கள் மகள் பரீட்சைக்கு தோற்ற முடியாது என பாடசாலை நிர்வாகம் கூறியுள்ளது.

எனினும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்தபோது அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் குறித்த மாணவி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பெற்றோர், இது குறித்து வடக்கு ஆளுநர் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.