தமிழின அழிப்பை மீண்டும் பேசுபொருளாக்கிய கனேடிய பொங்கல் விழா!

கடந்த 22 ஆம் திகதி கனடா பிராம்டன் நகரில் அமையவிருக்கும் தமிழின அழிப்பு நினைவுத்தூபி கட்டுமானத்திற்கு ஆதரவு தேடும் நிகழ்வாக இவ்வருட பொங்கல் நிகழ்வு மாறுபட்ட வகையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது.

இந்தப்பொங்கல் விழா 2022 கொரோனா பரவல் அச்சுறுத்தலின் பாதுகாப்புக் காரணமாக இணையம் வழியாக மெய்நிகர் நிகழ்வாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களைக் கவரும் வண்ணம் மாறுபட்ட வகையில் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டிருந்தது.

தமிழினத்தின் மாண்பினை வெளிக்காட்டும் வகையிலமைந்திருந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இம்முறையும் தமிழ்த் தேசிய எழுச்சி நடனங்களாகவும் பாடல்களுமாக பொங்கல் விழாவினை சிறப்பித்திருந்தன.அத்துடன் தமிழ்ப்பாரம்பரியத்தை போற்றி வரும் முன்னணி கலைஞர்களும் மற்றும் நடன இசைப் பள்ளி மாணவர்களும்இவ்வாண்டும் இந்தப் பொங்கல் நிகழ்வினில் கலந்து கொண்டனர்.

அதில் குறிப்பாக இளம் கலைஞர்கள் தமதுகலைத் திறமையினால் தமிழ்ப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக தம்மை வெளிக்காட்டி பார்வையாளர்களைப்பிரமிக்க வைத்தனர். அத்துடன் கலை நிகழ்ச்சிகளோடு சமாந்தரமாக நடப்பட்ட நிதிசேர் நிகழ்வு பிராம்டன் நகரில் அமையவிருக்கும் தமிழினஅழிப்பு நினைவுத்தூபி குறித்த கவனத்தை உலகளாவிய ரீதியில் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.அதேசமயம் நினைவுத்தூபி அமைவதற்காக உத்தியோகபூர்வமாக நடத்தப்பட்ட முதலாவது நிதிசேர் நிகழ்வு இது ஆகும். குறித்த நிகழ்வு சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கனடாவில் மட்டுமல்லாது உலகளாவிய நிலையில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் நினைவுத்தூபி அமைந்திட தமது ஆதரவினை வெளிப்படையக அறிவித்து ஆதரவளித்து தமிழனத்தின் ஒற்றுமையை வெளிக்காட்டியிருந்தனர்.இவற்றிற்கெல்லாம் மேலும் சிறப்புத் தருவதுபோல கனடிய மத்திய அரசு மாகாண அரசு உள்ளூராட்சிமன்றங்கள் ஆகிய மூன்று நிலையிலும் அஙகம் வகிக்கும் பல்வேறு அரசியல்வாதிகளும் இந் நிகழ்வில் கட்சிபேதமின்றி கலந்து கொண்டனர்.

அத்துடன் தமிழின அழிப்பு குறித்த தமது ஆதரவு நிலைப்பாட்டினையும் அவர்கள் உறுதி செய்தனர். இந்த நிலையில் நினைவுத்தூபி அமைப்புக் குழுவினருக்கு பக்கபலமாக தாமும் இருப்பதை வெளிப்படையாக அறிவித்திருப்பது தற்போது உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.