தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த 15 வயது மகன்! அதிர்ச்சி சம்பவம்

மொனராகலையில் தந்தையை 15 வயது மகன் செங்கல்லால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் மொனராகலை – பொரளுகந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளுகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆர்.எம். ஜயசுந்தர என்பவர் கடந்த 30 ஆம் திகதி செங்கல் சூளைக்கு அருகில் விழுந்திருந்த நிலையில் அவரின் மகன் மற்றும் அயலவர்களினால் ஹந்தபானாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகலை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த நபரின் மகனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உயிரிழந்த நபரை செங்கல்லால் தான் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த நபர் கடந்த 30 ஆம் திகதி தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த உளுந்தை பறிக்கச் சென்றுள்ளதுடன், மகனையும் அங்கு வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த குறித்த சிறுவனின் தந்தை உளுந்து பறிக்க வரவில்லை என்பதை சுட்டிக்காட்டி மகனை திட்டிவிட்டு கத்தியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலால் மகனின் இடது கையிலுள்ள இரு விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் சந்தேகநபரான மகன் செங்கல் சூளையிலிருந்த செங்கல் ஒன்றினால் தந்தையை தாக்கியதாக குறித்த சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை வெல்லவாய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.