யாழ் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றதாக தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், இது ஆரோக்கியமானது அல்ல என தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவலானது அதிகரித்துச் செல்கின்றது. ஜனவரி மாத முற்பகுதியில் இருந்து கொரோனா பரவல் அதிகரித்துச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது. இந்த அதிகரிப்பானது ஆரோக்கியமானதாக இல்லை.

தற்பொழுது அனைத்துச் செயற்பாடுகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக போக்குவரத்து,கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்றின் நிலை மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளார்கள்.

எனவே மக்கள் சுகாதார அமைச்சினால் இறுதியாக வெளியிடப்பட்ட சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும். ஒன்றுகூடல்‌களை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளவேண்டும் குறிப்பாக தேவையற்ற பயணங்கள் நடமாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

தற்போதைய நிலையில் தடுப்பூசி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 62 வீதத்திற்கு மேற்பட்டோர் முதலாம் கட்ட தடுப்பூசியையும் அதற்கு குறைவானவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் பூஸ்ரர் தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்கள் சற்றுக் குறைவாக இருந்தபோதும் தற்பொழுது மக்கள் ஆர்வம் காட்டி இந்தத் தடுப்பூசியை பெற்று வருவது அவதானிக்கக்கூடியதாகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.