மகள் மாலையில் தற்கொலை, தந்தை காலையில் தற்கொலை..! மட்டக்களப்பில் சம்பவம்!

17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி நேற்று (08) மாலையில் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், சிறுமியின் தந்தையார் இன்று (09) காலையில் வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

களுவங்கேணி முதலாம் பிரிவு அக்கரைவீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷ்கா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் என்பவர்களே இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில் சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்பவ தினமான நேற்று மாலை வீட்டில் நஞ்சு அருந்தி சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமி தற்கொலைக்கு காரணம் சிறுமியின் தந்தையார் என அந்தபகுதி அயலவர்கள் பேசத்தொடங்கியதையடுத்து சிறுமியின் தந்தையார் இன்று காலையில் வீட்டின் அறையின் உள்ள கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். \

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.