மகனின் திருமணத்தில் பறிபோன தாயின் உயிர்; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!

மகனின் திருமணத்தில் நடனமாடிய 55 வயதான பெண் ஒருவர் மகனின் கைகளில் சரிந்து விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தானில் நடந்துள்ளது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு, நீலம் என்கின்ற அப்பெண் தனது மகனின் கையைப் பிடித்து 20 வினாடிகள் மட்டுமே நடனமாடியதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 3 ஆம் திகதி, நீரஜ் திருமண ஊர்வலம் சிகானியில் உள்ள அவரது வீட்டிலிருந்து அல்வார் மாவட்டத்தின் கிஷன்கர் பாஸில் திருமணத்திற்காக புறப்படும்போது இந்த சம்பவம் நடந்தாக கூறப்படுகிறது.

55 வயதான நீலம் தனது மகனின் திருமண ஊர்வலத்தில் டிஜே இசைக்கு நடனமாடினார். அப்போது அவர் திடீரென சரிந்து விழுந்தார். இதன்போது அவரை பிடிக்க அவரது மகன், மணமகன் நீரஜ் விரைந்தார்.

நீலமை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நீலம் இறந்துவிட்டதாக கூறினர். இதனைக் கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நீலம் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு தனது மகனின் கையைப் பிடித்து 20 வினாடிகள் மட்டுமே நடனமாடினார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் இறந்தவருக்கு ஏற்கனவே இதய பிரச்சனைகள் இருந்ததாகவும், அதற்கான மருந்துகளை உட்கொண்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து, கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்த குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். மகனின் திருமணத்தில் தாயார் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.