நிலாவெளி கடற்கரையில் கரையொதுங்கியுள்ள சடலம்…!



திருகோணமலை – நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போன இளைஞரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தலாவ – தம்பகஹவெல, பத்தியமுல்ல பகுதியைச் சேர்ந்த கே.என்.நளின் பிரியன்த (21 வயது) என்பவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.

தனியார் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலர் நேற்று நிலாவெளி கடற்கரைக்கு சென்றிருந்த நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த இளைஞர் காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து கடற்படையினரும், உப்புவெளி பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் இளைஞரை மீட்க முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையிலேயே இளைஞரின் சடலம் இன்றைய தினம் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.

தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.