யாழில் மலேரியா நோயாளி ஒருவர் அடையாளம்

யாழ். போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரே மலேரியா காய்ச்சலுடன் இனங்காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா நாட்டிலிருந்து திரும்பி வந்த நிலையில் கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் குறித்த இளைஞனுக்கு மலேரியா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

வெளிநாட்டிலிருந்து வருவோர் காய்ச்சலுக்கு உள்ளானால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேவேளை மலேரியா அற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ள போதிலும், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களினால் மலேரியா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்குச் செல்பவர்கள் மலேரியா முன்னெச்சரிக்கை மருத்துவ வழிகாட்டுதல்களைத் தகுதி வாய்ந்த மருத்துவ அதிகாரிகளிடம் பெற்றுச் செல்லுமாறும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.