மனைவியின் தலையை பிளந்த கணவன் : காதல் மோகத்தால் விபரீத முடிவு!!



திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (40). இவர் பெங்களூரில் பில்டிங் காண்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த துர்கா தேவி (35) என்பவருடன் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கிருபாகரன் (15), யுவராஜ் (13) என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் பொம்மி குப்பம் பகுதியில் உள்ள துர்கா தேவியின் தாயார் விஜயலட்சுமி வீட்டிற்கு அடுத்த வாரம் ஆதி ஊரில் நடைபெறவுள்ள திருவிழாவிற்காக பெருமாள் மற்றும் துர்காதேவி ஆகிய இருவரும் சென்றுள்ளனர்.அங்கே கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை வாக்குவாதமாக மாறி கடும் கோபமடைந்த பெருமாள் திடீரென வீட்டில் வைக்கப்பட்டிருந்த கடப்பாரையை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி தாக்கியுள்ளார். இதில் மண்டை பிளவுபட்டு ரத்தவெள்ளத்தில் துர்காதேவி நிலைகுலைந்து விழுந்தார்.துர்கா தேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து துர்க்கா தேவியை மீட்டு ஷேர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பின்னர் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து துர்கா தேவியின் கணவர் பெருமாளை விசாரணை செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் துர்கா தேவியின் மூத்த சகோதரி முல்லைக்கொடி மீது பெருமாள் ஒருதலைபட்சமாக காதல் கொண்டதன் காரணமாகவே மனைவி கொலை செய்ததாக கூறியுள்ளார் என காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.