மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தொழிற்சங்கங்களின் ஆதரவை நான் பாராட்டுகின்றேன்: பிரதமர்



மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்க்கும் வேலைத்திட்டத்திற்குத் தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவைப் பாராட்டுவதாக்கப் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முற்போக்கு தொழிற்சங்கங்களுக்கான தேசிய நிலையத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் எடுத்த தீர்மானங்களாலேயே தற்போதைய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தற்போது அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நெருக்கடியை உருவாக்குவதற்குப் பங்களித்தவர்கள் நிரபராதிகளாகி தற்போதைய அரசாங்கத்தின் மீது சகல பழிகளையும் சுமத்துவதாகத் தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதமரிடம் சுட்டிக்காட்டினர்.

மக்கள் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலையைத் தீர்க்க அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்குத் தொழிற்சங்கங்கள் என்ற ரீதியில் அனைத்து உதவிகளையும் வழங்குவதாகத் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கம், பொதுஜன முற்போக்கு அரச ஊழியர் சம்மேளனம், ஸ்ரீலங்கா பொதுஜன ஆசிரியர் சங்கம், பொதுஜன தோட்ட ஊழியர்கள் சங்கம், உள்ளுராட்சி ஊழியர் சங்கம், பொதுஜன முன்பள்ளி சங்கத்தினர் உள்ளிட்ட முற்போக்கு தொழிற்சங்கங்களுக்கான தேசிய நிலையத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.