வவுனியாவில் நேருக்கு நேர் மோதிய இரு வாகனங்கள்

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று(22) வவுனியா – மன்னார் வீதியிலுள்ள வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, குருமன்காடு பகுதியில் இருந்து மன்னார் வீதி வழியாக மோட்டர் சைக்கிள் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த போது உக்குளாங்குளம் பகுதியில் இருந்து மாதா சொரூப வீதி ஊடாக மன்னார் வீதிக்கு முச்சக்கர வண்டி ஒன்று ஏற முற்பட்ட போது இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி வீதியை விட்டு விலகின.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.