சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழ் இளைஞர்!

நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்ற மலேசிய தமிழர் இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலுக்காக அவரது மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்த ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனது மகனின் தண்டனை மற்றும் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நாகேந்திரனின் தாயார் நேற்று தாக்கல் செய்த மனுவை, சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அவரது தாயாரின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, நாகேந்திரன், நீதிமன்ற அறையில் இருந்து அவரது குடும்ப உறுப்பினர்களுடன் கைகோர்க்க நீதிமன்றம் அனுமதித்தது.

இந்தநிலையில் தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் நாகேந்திரன் தமக்கு விருப்பமான ஆடையை அணிந்து புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் 2010 ஆம் ஆண்டு முதல் 42.7 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்திய குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2021, நவம்பர் 10 ஆம் திகதி அன்று அவர் தூக்கிலிடப்படவிருந்தார், எனினும் கோவிட் காரணமாக அவருக்கு தற்காலிக விடுப்பு கிடைத்தது.

ஏற்கனவே மலேசிய பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப், நாகேந்திரனுக்கு மரண தண்டனையை நிறைவேற்றவேண்டாம் என்று கோரிக்கையை சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிடம் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.