நாட்டின் பல பகுதிகளில் குவிக்கபட்ட இராணுவ வீரர்கள் – வெளியான காரணம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் எரிபொருள் பௌசர்கள் உரிய முறையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை வந்தடைகிறதா என்பதை பரிசோதிப்பதற்காகவே இந்த கண்காணிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட பணிப்புரைக்கு அமைய இராணுவம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அனைத்து எரிபொருள் பௌசர்களும் பிரதான எரிபொருள் களஞ்சியங்களில் இருந்து புறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளின் கட்டளைத் தளபதிக்கு உடனடியாக அறிவிக்கப்படும். அதன்படி, கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத் தளபதி இராணுவத்தினரின் குழுக்களை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அல்லது வீதிகளுக்கு அனுப்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பிரதான எரிபொருள் சேமிப்பு வளாகங்களுக்கு மேலதிகமாக, நாடு முழுவதும் 12 எரிபொருள் களஞ்சியங்கள் இயங்கி வருகின்றன.

இதேவேளை, எரிபொருள் விநியோக புகையிரதங்களின் பாதுகாப்பிற்காக இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.