கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவரை விஷ கடல்வாழ் உயிரினம் தாக்கியதில் பலி

அம்பாறை – காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் பாரிய சொறிமுட்டை (ஜெலி) கடித்ததில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சொறிமுட்டை (ஜெலி) கடிக்கு உள்ளான கடற்தொழிலாளர் சக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த கடற்தொழிலாளர் மாயவலை மூலம் கடற்தொழிலில் ஈடுபட்ட பின்னர் கடற்கரையிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் படகிலிருந்து கடலில் இறங்கி வலையைச் சரி செய்ய முயற்சித்துள்ளார்.

இவ்வாறு வலையைச் சரி செய்யக் கடலுக்குள் இறங்கிய கடற்தொழிலாளரே உயிரிழந்துள்ளதுடன், அவரது நெஞ்சுப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான அடையாளங்களும் காணப்படுவதாகச் சம்பவ இடத்திற்கு வருகை தந்த காரைதீவு தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

உடனடியாக கடலிலிருந்து சக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்ட குறித்த கடற்தொழிலாளர் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தந்தை என்பதுடன், காரைதீவு 8 ஆம் பிரிவினை சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் (வயது-51) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.