கடுமையாக்கப்பட்டது இன்று இரவு ஊரடங்குச் சட்டம் : தேவைப்படும் போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அனுமதி! 



இன்று இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையான நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஊரடங்குக் காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடவேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூடவேண்டாம் எனவும் பொதுமக்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.   

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி  நிலை உக்கிரமடைந்ததை அடுத்து பொதுமக்கள் வீதிக்கு இறங்கி போராட ஆரம்பித்தனர். 

போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து அது  பாரிய அரசியல் நெருக்கடிகளையும் தோற்றுவித்தது, இதன் காரணமாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். 

எனினும் பதவி விலகுவதற்கு முன்னர் மகிந்த  ஆதரவாளர்கள் என்ற பெயரில் குண்டர்கள் களமிறக்கப்பட்டு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் சீர்குலைக்கப்பட்டு வன்முறை நிலை ஏற்பட்டது. 

இதன் காரணமாக நாட்டின் அமைதி சீர்குலைந்ததுடன்,  நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.  கடந்த இரண்டு நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு வருவதுடன் நாளையதினம் ஊரடங்கு காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவையான போது துப்பாக்கிச் சூடு உட்பட சட்ட பலத்தை பயன்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரக்காரர்கள் அல்லது வன்முறைக் குழுக்களால் உயிர் இழப்பு அல்லது கொள்ளைச் சம்பவங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையில் வாகன நிறுத்துமிட சோதனைகளைத் தடுக்க அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அரச அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம், கொள்ளை அல்லது உயிர் இழப்பு அல்லது பாரிய காயங்களைத் தடுப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.