கனடாவில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர் தொடர்பில் : பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்

கனடாவில் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த இலங்கைத் தமிழர் விவகாரத்தில், சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பீல் பிராந்திய பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் கனடாவின் மிசிசாகா பகுதியில் சாலை விபத்தில் சிக்கி 35 வயதான இலங்கைத் தமிழர் சுரேஷ் தர்மகுலசிங்கம் மரணமடைந்தார்.

குறித்த சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்திய சாரதி, பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், பீல் பிராந்திய பொலிசார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில், தர்மகுலசிங்கம் மீது விபத்தை ஏற்படுத்திய சாரதியை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோ பகுதியை சேர்ந்த 38 வயது Luke Conklin என்பவர் இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜூலை 25ம் திகதி நீதிமன்ற விசாரணைக்கு அவர் உட்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்துக்கு காரணமான வாகனமும் மீட்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் தர்மகுலசிங்கத்தின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையில், விபத்தை ஏற்படுத்திய நபர் கட்டாயம் பொலிசாரிடம் சரணடைய வேண்டும் எனவும், சட்டத்தின்படி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

டிசம்பர் 17ம் திகதி இரவு நடந்த விபத்தில் குற்றுயிராக மீட்கப்பட்ட தர்மகுலசிங்கம், டிசம்பர் 24ம் திகதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மேலும், அக்டோபர் மாதம் திருமணம் முடித்திருந்த தர்மகுலசிங்கம் டிசம்பர் மாதம் சாலை விபத்தில் பலியான சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியிருந்தது.