சட்டவிரோதமாக அவுஸ்திரோலியா செல்ல முற்பட்ட 21 பேர் கைது

புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரோலியாவுக்கு படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்து இன்று (19) அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இரண்டு இயந்திரப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, புதன்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு கடற்கரையில் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது இரு படகுகளில் அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு தயாராகிய நிலையில் 21 பேரை கைது செய்ததுடன் இரு படகுகளையும் மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இதன் பிரதான சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.