யாழில் கடும் காற்றினால் ஒருவர் உயிரிழப்பு 10 பேர் பாதிப்பு!

யாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம் வீசிய கடும் காற்று காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.

யாழில் வீசிய கடும் காற்றினால் கோப்பாய், நல்லூர், காரைநகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோப்பாய் ஜே 286 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர், நல்லூர் ஜே 97 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டின் முன்பாக கதிரையில் இருந்து கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த வேளை காற்றுக்கு வீட்டு வளவினுள் நின்ற தென்னை மரம் விழுந்ததில் அதனுள் சிக்குண்டு உயிரிழந்தார்.

மேலும், காரைநகர் ஜே 41 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் என மொத்தம் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.