யாழில் கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது

யாழ். வடமராட்சி, நெல்லியடியில் வீடொன்றை உடைத்து நகைகள் மற்றும் அலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவமானது இன்று(29) இடம்பெற்றுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நெல்லியடி நகரப் பகுதியில் உள்ள வீடொன்றைப் பட்டப்பகலில் உடைத்து நகைகள் மற்றும் அலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருட்டுப் போயிருந்தன.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்தநிலையில் 28 வயதுடைய ஆண் ஒருவரும், 20 வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஐ போன் ஒன்றும், ஐ பாட் ஒன்றும், 06 கிராம் எடையுடைய தோடுகளும் மற்றும் 35 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.