நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கலினால் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்றையதினம் வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாயின் பிள்ளைகள் மூன்று நாட்களாக கடும் பசியால் நீரை மட்டும் அருந்தியுள்ளனர்.
இதனால் அதனை பார்க்க முடியாமல் தாய் உயிரை பறிக்கும் ஆபத்தான விதைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸாரின்
முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான
நிலையில் உள்ள போதிலும் அவரது உயிரை காப்பாற்ற முடியும் என அவசரகால பிரிவின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்நிலையில் அந்த குடும்பத்தின் பசியை போக்குவதற்கு உணவிற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெல்லவாய கிராமப் பகுதியில் வசிக்கும் 44 வயதான தந்தை மற்றும் தாய்க்கு ஒன்பது, எட்டு மற்றும் நான்கு வயதுடைய மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
நிரந்தர வருமானம் இல்லாததால் சமீப நாட்களாக சாப்பிட எதுவும் கிடைக்காமல் இந்த குடும்பத்தினர் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
இக்குடும்பத்திற்கு யாராவது உதவ விரும்பினால் தந்தையின் தொலைபேசி இலக்கமான 076-1040036 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.