தனக்கு வழங்கப்பட்ட உத்தரவிற்கு நீதி கோரி கூரைமேல் ஏறிய அம்பியுலன்ஸ் சாரதி !

நீதிகோரி திருகோணமலை தள வைத்தியசாலை கட்டடத்தின் கூரை மேல் அம்பியுலன்ஸ் சாரதியொருவர் ஏறி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றமானது முறையற்ற விதத்தில் சட்டத்துக்கு முரணான முறையில் தன்னை வேறொரு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் திருகோணமலை தள வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராகவும் தனது இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு கோரியும் குறித்த நபர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கெமுனு துமிந்த திலக (வயது – 42) என்ற அம்பியுலன்ஸ் வண்டி சாரதி திருகோணமலை வைத்தியசாலையில் எட்டு வருடத்துக்கும் அதிகமாகக் கடமையாற்றி வருகின்றார். தன்மீது போதைவஸ்து பயன்பாடு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையைத் தான் அனுபவிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் சரியான நீதி கிடைக்க வேண்டும் எனவும் தனது முறையற்ற இடமாற்றத்தை ரத்து செய்யுமாறும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை தள வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிக்கையில்,

குறித்த சாரதி தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் என்ற வகையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகக் குறித்த சாரதியின் இடமாற்றம் இடம்பெற்றது.

சாரதியைத் திருகோணமலையிலிருந்து கந்தளாய் பொது வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளதாகவும், இடமாற்றத்திற்குப் பின்னர் குறித்த சாரதி தனது வாகனம் மற்றும் விடுதியினை உரிய முறையில் மீண்டும் இது வரை கையளிக்கவில்லை எனவும் பணிப்பாளர் குற்றம் சுமத்தினார்.

மேலும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட இடமாற்றத்தை அடுத்து, சாரதி இன்றையதினம் திருகோணமலை வைத்தியசாலை கட்டிடத்தின் கூரைக்கு மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அது குறித்து அதனையும் சுகாதார அமைச்சின் செயலாளர் நாயகத்திற்கு அறிவித்ததாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.