யாழில் பொய் கூறி எரிபொருள் நிரப்ப முயன்ற சட்டத்தரணி : கொந்தளித்த பொதுமக்கள்!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் நிரப்புவற்கு நீண்ட நேரம் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்த போது, வவுனியாவை சேர்ந்த பிரபல மூத்த சட்டத்தரணி தான் கொழும்பு அமைச்சில் இருந்து வருவதாக பொய் கூறி எரிபொருள் நிரப்ப முற்பட்டமையை அடுத்து குழப்பம் ஏற்பட்டது.

இன்றைய தினம் அதிகாலையில் இருந்து, எரிபொருள் பெறுவதற்காக பெரும்பாலனவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த போது, குறித்த சட்டத்தரணி வரிசையை மீறி எரிபொருள் நிரப்ப முற்பட்டமையால், குழப்ப நிலை ஏற்பட்டது.

நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்களை தவிர்த்து, இடையில் வந்த வாகனத்திற்கு எவ்வாறு நீங்கள் எரிபொருள் நிரப்புவீர்கள் என வரிசையில் நின்றவர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் அமைச்சிலிருந்து வந்தவர் என ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

அதற்கு அங்கிருந்தவர்கள் கடும் எதிர்பை தெரிவித்தமையை அடுத்து குறித்த சட்டத்தரணி அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

டீசலுக்காக பலரும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது, நாகரிகமின்றி , பொய் கூறி இடையில் புகுந்து எரிபொருள் நிரப்ப சட்டத்தரணி முற்பட்டமை தொடர்பில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்த மக்கள் கடும் விசனத்தை தெரிவித்திருந்தனர்.