மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் : பரிதவிக்கும் குழந்தை

மட்டக்களப்பு- மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே கணவனால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழடித்தீவு, காளிகோவில் வீதியிலுள்ள குறித்த இளம் குடும்பமான கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தினால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் சம்பவதினமான நேற்று அதிகாலை 4 மணிக்கு தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன், இரண்டரை வயது குழந்தையை தனது சகோதரியின் வீட்டில் ஒப்படைத்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் 12 மணியளவில் சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கைதான சந்தேகநபர் 30 வயதுடையவர் எனவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.​