வவுனியாவில் இடம்பெறவிருந்த மரக்கடத்தலை முறியடித்த பொலிஸார்!

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடு காட்டுப் பகுதியில் மரக்கடத்தல் முயற்சி வட்டார வனவள அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

நைனாமடுவில் ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதியில் நேற்று இரவு மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வட்டார வனவள அதிகாரிகளுக்குக் இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

அதனடிப்படையில் வட்டார வனவள அதிகாரி சமரதுங்க தலைமையிலான உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தேடுதலில் 6லட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் காட்டுப்பகுதியில் வெட்டப்பட்டு ஏற்றுவதற்குத் தயாராகக் காணப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வட்டார வனவள அலுவலக அதிகாரிகளின் வருகையையடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் மரக் குற்றிகளை வட்டார வனவள அலுவலகத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகள் நெடுங்கேணி பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த மர குற்றிகளையும், கனரக வாகனத்தையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.