இலங்கையில் இருந்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 07 பேர்!

இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் தமிழகத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண், 4 குழந்தை உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்துள்ளாக எமது பிரதான செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இன்றையதினம் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் தீடை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்கள் தமிழகத்திற்கு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

தீடை பகுதியில் இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற பொலிசார் அவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து விசாரணை முடிந்த பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு தஞ்சமடைந்துள்ளவர்கள் வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் என தெரிய வந்துள்ளது.