நாட்டில் இனி பஞ்சம் ஏற்படாது : மஹிந்த அமரவீர

நாட்டில் தற்போது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பஞ்சம் ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒருமாதத்திற்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப்படுவதாகவும் அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேவைக்கு ஏற்ப சதோச மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகளில் அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன்னர், 248,000 ஹெக்டேயர் நிலப்பரப்பே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது 470,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் மக்கள் வீணாக அச்சப்படத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.