பாதுகாப்பற்ற கழிவறை குழிக்குள் விழுந்து விழுந்து பலியான ஆண் குழந்தை!

ஒன்றரை வயது ஆண் குழந்தை பாதுகாப்பற்ற கழிவறை குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை வடக்கு வத்தளபொல பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் ஓபேய் மெய்ஸ் என்ற ஆண் குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தை தனது 11 வயது மற்றும் 7 வயதான சகோதரர்கள் மற்றும் சில சிறார்களுடன் வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்துள்ளதுடன் தாய் சமையல் அறையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிள்ளையை காணவில்லை என்பதால், கணவருடன் இணைந்து பிள்ளையை தேடிய போது களஞ்சிய அறைக்குள் இருக்கும் கழிவறை குழிக்குள் பிள்ளை விழுந்து கிடப்பதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து பிள்ளையை மீட்டு, அயல் வீட்டு நபரின் முச்சக்கர வண்டியில் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் ஏற்கனவே பிள்ளை இறந்து விட்டதாக வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர்.

6 அடி ஆழமான இந்த கழிவறை குழி கெங்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ளதுடன் மேற்பகுதி தகடு மற்றும் மட்டைகளால் மூடப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.