வவுனியாவில் திடீரென இடம்பெற்ற கலவரம்: தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் !

வவுனியா எரிபொருள் நிலையமொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆண்டியா புளியாளங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாடானது வாள்வெட்டுச் சம்பவமாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் வாள்வெட்டு சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்துள்ளதுடன், இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, நேற்றுமுன்தினம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வாகனங்கள் வரிசையில் நின்றிருந்துள்ளன.

இந்நிலையில் இரு தரப்பினர்களுக்கிடையில் வாய்த்தக்க முரண்பாடொன்று ஏற்பட்டுள்ளது. பிறகு இவ் முரண்பாடானது முற்றி வாள்வெட்டில் முடிவடைந்ததாகக் கூறப்படுகின்றது.

இச் சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்துள்ளதுடன், பேருந்து ஒன்றுதாக்கப்பட்டு, கப் ரக வாகனம் ஒன்றின் இருக்கை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்துள்ள பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.