முல்லைத்தீவில் மதுபோதையில் மர்ம குழுவினர் இராணுவத்தினர் மீது மேற்கொண்ட தாக்குதல்!

முல்லைத்தீவு – விசுவமடு பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு பாதுகாப்பு சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது மதுபோதையுடன் வந்த குழு ஒன்றினால் திட்டமிட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கண்ணாடி போத்தல்கள் மற்றும் கற்களால் இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது அந்தக் குழுவினரை அங்கிருந்து கலைப்பதற்காகவே வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு – விசுவமடு பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இரவு பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலால் அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

இதனையடுத்து இராணுவத்தினரால் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்து இராணுவ ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சம்பவம் இடம்பெற்றபோது பொலிஸாரின் தலையீட்டுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதன்போது இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது காயமடைந்த 3 இராணுவ வீரர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.