யாழில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் : மடக்கிபிடித்த பொதுமக்கள்!

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலிப் வல்லைப்பகுதியில் , வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் பொது மக்களினால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

இறைச்சி வியாபாரி ஒருவரின் 3 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட நபர்களே இவ்வாறு நையப்புடைக்கபட்டு பின்னர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புத்தூர் பகுதியில் வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர், வல்லை பகுதியூடாக வீட்டுக்கு சென்றுள்ளார். இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் கத்தி முனையில் வியாபாரியை அச்சுறுத்தி அவரிடமிருந்த 3 லட்சம் ரூபா பணத்தினை கொள்ளை அடித்துள்ளனர்.

சாமர்த்தியமாக செயல்பட்ட இறைச்சி வியாபாரி ஒரு இளைஞனை துரத்திப் பிடித்துள்ளார். பின்னர் பிரதான வீதியில் பயணித்த பொது மக்களினால் இளைஞன் நையப்புடைக்கப்பட்டார்.

தப்பிச்சென்ற இன்னொரு இளைஞன் நாவல் காட்டு பகுதியில் உள்ள கோயில் கேணியில் கால் கழுவிக் கொண்டிருந்த போது கையும் மெய்யுமாக அப்போது இளைஞர்களினால் பிடிக்கப்பட்டார். இதன்போது குறித்த இளைஞனிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் இளைஞர்கள் இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.