நாளை முதல் கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமைபோல் இயங்கும் : வெளியான அறிவிப்பு!

சமகால பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் நாளை (20) திங்கட்கிழமை முதல் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் வழமைபோல நடைபெறும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.

இன்று (19) மாலை கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் திசாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் புள்ள நாயகம் ஆகியோர் கிழக்கிலுள்ள 17 வலயக்கல்விப் பணிப்பாளர்களோடும் “சூம்” முறையிலான தொழில்நுட்பத்துடன் இணைந்து கூட்டத்தை நடத்தி மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

தூர பிரதேச பாடசாலைகளுக்கு செல்ல முடியாத ஆசிரியர்கள் வீட்டிலிருந்து இணையவழி முறைமூலம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும் அதனை அதிபர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி அருகிலுள்ள பாடசாலைகளுக்கு யாரையும் இணைப்பு செய்ய அனுமதிப்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சகல ஆசிரியர்களும் பாடசாலைக்கு செல்ல வேண்டும்.

செல்லமுடியாத எரிபொருள் பிரச்சினை உள்ள ஆசிரியர்கள் வீட்டிலிருந்து இணையவழி மூலம் கற்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேவேளை, தூரத்துக்கு செல்லும் மாணவர்கள் எரிபொருள் பிரச்சினை காரணமாக செல்ல முடியாவிட்டால் அவர்கள் அருகில் இருக்கக்கூடிய பொருத்தமான பாடசாலைக்கு சென்று கல்வியை கற்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள் ஏனைய விடயங்கள் தொடர்பாக அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் முடிவு எடுக்கவும் அங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.