திருகோணமலையில் மிளகாய் தூள் தாக்குதலால் ஐவர் வைத்தியசாலையில்!

திருகோணமலை – ரொட்டவெவ, மிரிஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் வீசப்பட்ட மிளகாய் தூள் தாக்குதலால் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது . சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கை கலப்புடன் தொடர்புடைய குறித்த இரு குழுக்களுக்கிடையே தொடர்ந்தும் முறுகல் நீடித்து வந்துள்ளநிலையில் கடைக்குச் சென்ற சிறுவனை தாக்கியுள்ளதுடன், மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதில் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை மற்றைய குழுவில் உள்ள 2 சிறுவர்களும் தாம் தாக்கப்பட்டதாக தெரிவித்து நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த 5 சிறுவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை இந்த சிறுவர்கள் அனைவரும் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என கூறப்படும் நிலையில் , சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.