சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்த நபரை மாறுவேடத்தில் சென்று கைது செய்த பொலிஸார்!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாந்துறை பிரதான வீதியிலுள்ள சில்லறை கடை ஒன்றில் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்த ஒருவரை நேற்று(20) ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து 145 லீற்றர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹரிச டி சில்வா தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வை.விஜயராஜா தலைமையிலான குழுவினர் கடையை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது மாறுவேடத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த கடைக்கு சென்று பெட்ரோல் வாங்குவது போல நடித்து பெட்ரோலை வாங்கிய நிலையில் சுற்றிவளைத்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் உடனடியாக கடையை முற்றுகையிட்டு சோதனையிட்டபோது கடையின் பின்பகுதியில் கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 145 லீற்றர் பெட்ரோலை மீட்டதுடன் கடை முதலாளியை கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கடை முதலாளி நேற்று(20) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டபோது பெட்ரோலை பறிமுதல் செய்து அரச உடமைகுமாறும், அபதாரமாக ஐந்தாயிரம் ரூபா செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.