பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகை!

பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களுக்கு இந்த மாதம் முதல் 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருளாதார ரீதியாக கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ள 33 லட்சம் குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி ஆகியன இதற்கான நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் நீல் பண்டார கூறியுள்ளார்.

ஆறு மாதங்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பணம் வீக்கம், உணவு பற்றாக்குறை மற்றும் எரிபொருள் நெருக்கடி என்பன காரணமாக மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பல குடும்பங்கள் அன்றாடம் உணவை சாப்பிடுவதில் கூட பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பலர் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் அன்றாடம் உழைத்து சாப்பிடும் வறுமை கோட்டில் வாழும் மக்கள் பெரும் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.