பொலிஸார் மீது கார் மோதியதால் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு!

வாடிகனில் போப்பாண்டவரின் சுவிஸ் பாதுகாவலர்கள் கார் ஒன்றை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போப்பாண்டவரின் உரையைக் கேட்பதற்காக ஏராளமானோர் வாடிகன் வந்திருந்த நிலையில், கார் ஒன்று சோதனைச்சாவடியில் நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது.

பொலிசார் காரை நிறுத்தும்படி கோரியும் அவர் நிற்காமல் சென்று பொலிசார் இருவர் மீது மோதியதில் அவர்கள் காயமடைந்துள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து, போப்பாண்டவரின் சுவிஸ் பாதுகாவலர்கள் அந்தக் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்.

காரின் சக்கரத்தில் ஒரு குண்டு பாய்ந்ததால், தரையை உராய்ந்தபடி கார் நின்றுள்ளது. உடனடியாக காரிலிருந்து இறங்கிய ஒருவர் தப்பியோடியிருக்கிறார்.

அருகிலுள்ள ஒரு தெருவுக்குள் தப்பியோடிய அவரை பொலிசார் துரத்திச் சென்று டேஸர் உதவியுடன் பிடித்திருக்கிறார்கள்.

அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ள பொலிசார், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அல்பேனியா நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் வாடிகனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொலிசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.