எரிபொருள் நிலையம் சென்ற கணவரை காணவில்லை : மனைவி முறைப்பாடு!

மலர்ச்சாலையின் வாகனத்திற்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள வீட்டில் இருந்து சென்ற தனது கணவன் நான்கு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை எனக் கூறி மலர்ச்சாலையின் உரிமையாளரின் மனைவி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அம்பலாங்கொடை கஹவே பகுதியில் உள்ள மலர்ச்சாலையின் உரிமையாளரது மனைவியே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

கணவன் வீடு திரும்பவில்லை என்பதுடன் அவரது கையடக்க தொலைபேசியும் செயலிழந்துள்ளது எனவும் மனைவி முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

பெண் வழங்கிய கணவனின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்ட போது தொடர்புக்கொள்ள முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் இல்லாது மலர்ச்சாலையின் நாளாந்த பணிகளை செய்ய முடியாது என்பதால், எனது கணவர் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்று எரிபொருள் இல்லை எனக் கூறி வீடு திரும்பி இருந்தார்.

வீடு திரும்பிய எனது கணவரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட ஒருவர், எரிபொருளை பெற்றுக்கொள்ள வருமாறு கூறினார். இதனையடுத்து கணவர் எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்றதாகவும் பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்ற கணவன் வீடு திரும்பவில்லை என்பதால், அவரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட போது, தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்து.

எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு வீதிக்கு வருமாறு கூறியது யார். அப்போதில் இருந்து அவரது தொலைபேசி செயலிழந்து இருப்பது மற்றும் கடந்த 20 ஆம் திகதியில் இருந்து இதுவரை வீடு திரும்பவில்லை என்பது மர்மமாக இருப்பதாக பெண், பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

நான்கு நாட்களாக வீடு திரும்பாத மலர்ச்சாலையின் உரிமையாளர் குற்றங்களில் ஈடுபட்டார் என்பது தொடர்பான எவ்வித முறைப்பாடுகளும் இல்லை எனவும் அவருக்கு எதிரிகள் இருந்தனர் என்பதற்கான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.