எரிபொருள் நிலையத்தில் வன்முறையை தூண்டும் நபர்களை வீடியோ பதிவு செய்யுங்கள் : பொலிஸார் விடுத்த உத்தரவு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலவரத்தை உருவாக்கும் நபர்கள் தொடர்பில் வீடியோ பதிவு செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடக்கும் கலவரம், மோதல்கள் போன்ற அனைத்து சம்பவங்களையும் வீடியோவாக பதிவு செய்யுமாறு நிரப்பு நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

வீடியோ காட்சிகளின் நகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கொடுத்து பொலிஸ் புத்தகங்களில் பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தொடர்வதற்கு இந்தக் காணொளிகள் பயன்படுத்தப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் தனது உத்தரவில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.