நுவரெலியாவில் கோடாரியால் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்!

கணவர் ஒருவர் தனது மனைவியை கோடாரியால் அடித்ததால் மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று இரவு நுவரெலியா ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான 24 வயது சுப்பிரமணியம் சத்தியவாணி என்பர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்த இளம் பெண்ணின் கணவர் தோட்டத்தில் தொழில் செய்து வருவதுடன், பகுதி நேர வருமானத்திற்கு நுவரெலியா நகரில் முச்சக்கரவண்டி சாரதியாகவும் பணியாற்றி வருகின்றார்.

சம்பவ தினமான நேற்று (25-06-2022) இரவு தனது தொழிலை முடித்து விட்டு வீடு திரும்பிய கணவருக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதன்போது ஆத்திரமடைந்த கணவன், கோடரியால் மனைவியின் தலையில் தாக்கியுள்ளார்.

சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்ததுடன், கணவன் தனது இளைய மகளைத் தூக்கிக் கொண்டு, இரவோடு இரவாக நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார்.
மேலும் சம்பவ இடத்திற்கு இன்று காலை நுவரெலியா மாவட்ட நீதவான் விஜயம் செய்து மரண விசாரணை நடத்தியுள்ளார்.

நீதவானின் உத்தரவுக்கமைய சடலம் சட்ட வைத்தியர் ஒருவரின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.