காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விரைவில் தீர்வு!

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்தி, அதனூடாக விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் நீதியை பெற்றுத்தருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், கல்வியங்காட்டில் அமைந்துள்ள காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தில் உறவுகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

தற்போதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் மேலும் இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினாலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

இதேவேளை அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரும் முயற்சிகள் இடம்பெறும் என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.