யாழில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கனிப்பு!

வடபிராந்தியத்தில் இன்று (27) அதிகாலை வரை பெரும்பாலான இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சேவை ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க பெட்ரோல் வழங்கப்பட வேண்டும்.

பெட்ரோல் வழங்கப்படாத பட்சத்தில் இன்று முதல் பணியில் ஈடுபடப் போவதில்லையென இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்திய தொழிற்சங்கங்கள் நேற்று(26) அறிவித்திருந்தன.

இதை தொடர்ந்து, யாழ் மாவட்டத்திலுள்ள இ.போ.ச ஊழியர்களிற்கு பெட்ரோல் இன்று வழங்கப்படுமென யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

எனினும், இன்று கடமைக்கு சமூகமளிக்க எரிபொருள் இல்லையென தெரிவித்து, ஊழியர்கள் வடக்கிலுள்ள இ.போ.ச சாலைகளின் போக்குவரத்து சேவையை இதுவரை ஆரம்பிக்கவில்லை.

வழக்கமாக அதிகாலையில் இடம்பெறும் சேவைகளும் இடம்பெறவில்லை. ஆனாலும் ஒரு சில பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெட்ரோல் இன்று கிடைத்தால் இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.