லொறியில் மீட்கப்பட்ட பெருந்தொகை சடலங்கள் !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் San Antonio புறநகரில் கைவிடப்பட்ட லொறி ஒன்றில் புகலிடகோரிக்கையாளர்கள் என நம்பப்படும் 46 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குள் நான்கு சிறுவர்கள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.

உயிர் பிழைத்தவர்களின் உடல்கள் வெப்பமாக காணப்பட்டதாகவும் அவர்கள் வெப்ப பக்கவாதத்தினால் அவதிப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்த நகர ஊழியர் ஒருவர், இந்த லொறி தொடர்பில் அவசர பிரிவிற்கு தகவல் வழங்கிய நிலையில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் இருந்து 250 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள San Antonio ஆட்கடத்தல்காரர்களுக்கான முக்கிய போக்குவரத்து பாதையாக உள்ளதென தெரியவந்துள்ளது

ஆட்கடத்தல்காரர்கள், அமெரிக்காவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரை, தொலைதூரப் பகுதிகளில் சந்தித்து, அவர்களை லொறியில் ஏற்றி செல்லும் நடைமுறை ஒன்றை பின்பற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சாரதியால் கைவிடப்பட்டு செல்லப்பட்ட குறித்த வாகனத்தில் ஏசி வசதி இல்லை எனவும் அதற்குள் குடிநீர் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் மூச்சு திணறி உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. “உயிரிழந்தவர்களுக்கு குடும்பங்கள் இருந்தன.

ஒரு சிறந்த வாழ்க்கையைக் கண்டுபிடிக்க அவர்கள் முயற்சித்திருக்கலாம். எனினும் அது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” என San Antonio மேயர் Ron Nirenberg தெரிவித்துள்ளார்.