கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவர் பலி : 600இற்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்!

பொலன்னறுவை – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அங்கிருந்து 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றிரவு தடுப்பு முகாமில் இருந்த கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அதன் பின்னர் முகாமுக்குள் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கலவரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றியிருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது கைதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இன்று காலை சுமார் 500-600 கைதிகள் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்க விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.