திருகோணமலையில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் பலி!

திருகோணமலையில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தீப்பற்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலேயே இந்த சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் மூலம் தீ பரவியிருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ரவீந்திரன் சுதாசினி (47வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் இன்று(29) காலை சாமி அறைக்கு சென்று விளக்கேற்றிவிட்டு தீக்குச்சியை கீழே வீசிய போது அந்த அறைக்குள் இருந்த பெட்ரோல் போத்தல் மீது விழுந்தமையால் தீப்பற்றியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணைகளின் போது உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அரை போத்தல் பெட்ரோல் மட்டுமே சாமி அறைக்குள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.