யாழில் பல்கலைகழக மாணவிகள் முன்வைத்த குற்றச்சாட்டு!

யாழ்.பல்கலைகழகத்திற்குள் புகுமுக இஸ்லாமிய மாணவிகள் மீது பகிடிவதை புரிந்ததாக கூறியதுடன் தமது மத நம்பிக்கைகள் குறித்தும் பல்கலைகழக ஒழுங்காற்று பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி பேசியதாக மாணவிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து மாணவிகள் தரப்பில் ப்ல்கலைகழக மாணவர் ஒன்றியத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டில் கூறப்பட்டதாவது,

தமது சொந்த ஊரை சேர்ந்த புகுமுக மாணவிகள் இருவரை பல்கலைகழக வளாகத்திற்குள் சந்தித்து தமது மத நம்பிக்கைகள் குறித்து பேசிய நிலையில் , இதனை அவதானித்த விரிவுரையாளர் ஒருவர் பல்கலைகழக ஒழுக்காற்று பிரிவு பொறுப்பதிகாரியிடம் முறையிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஒழுக்காற்று பிரிவு பொறுப்பதிகாரி தனது அறைக்கு தங்களை அழைத்து பகிடிவதை செய்ததாக அச்சுறுத்தியதுடன், தங்கள் மத நம்பிக்கைகள் குறித்து இழிவாக பேசியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதோடு , பகிடிவதை செய்யவில்லை என பல தடவைகள் தாம் கூறியதையும் பொருட்படுத்தாமல், எழுத்துமூலம் கேட்டதுடன், அதனை பல்கலைகழகத்திற்கு வெளியே சென்று போட்டோ பிரதி எடுத்து தருமாறும் தங்களை வருத்தியதாகவும் மாணவிகள் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை பகிடிவதைக்கு உள்ளானதாக ஒழுக்காற்று அதிகாரியால் கூறப்படும் புகுமுக இஸ்லாமிய மாணவிகள் இருவரும் கூட பல்கலைகழக யாழ்.பல்கலைகழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் ஊடாக கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு சம்பவம் தொடர்பில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

அதிலும் சிரேஷ்ட மாணவிகள் தங்களுடை ஊரை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் தங்களுடன் நட்புரீதியாக உரையாடியதுடன், அறிவுரைகளை வழங்கியதாகவும் கூறியுள்ளதுடன், பகிடிவதை செய்யவில்லை என ஒழுக்காற்று அதிகாரிக்கு கூறிய நிலையில், தங்களையும் திரும்ப.. திரும்ப.. கடிதம் எழுதுமாறு வற்புறுத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் பல்கலைகழகத்திற்கு வெளியே சென்று போட்டா பிரதி எடுத்துவருமாறு துன்புறுத்தியதாக கூறியுள்ளதுடன், பல்கலைகழக கல்வியை தொடர்வதற்கு அச்சமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.